குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.9.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)

இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா ஆட்சித் தலைவரான உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மகள் தான் அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்கள்.
இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் ஜனாஸா - மரணத் தொழுகை தொழுவிக்கப்பட்டு, ஜன்னத்துல் பக்கீயில் முதன் முதல் அடக்கம் செய்யப்பட்ட நபித்தோழரான உத்மான் பின் மாஸுன் (ரலி) அவர்களின் மருமகளுமாவார்கள். இன்னும்

சிறிய தந்தையான நபித்தோழர் ஜைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள், இஸ்லாமிய படைத்தலைவராக பணியாற்றியவரும் இன்னும் உயிர்த்தியாகியுமாவார். தனது சகோதரர் ஜைத் பின் கத்தாப் (ரலி) அவர்களைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் பெருமைபடக் குறிப்பிடும் போது, எனது சகோதரர் இறைநம்பிக்கை கொள்வதிலும் என்னை முந்திக் கொண்டார், உயிர்த்தியாகம் செய்வதிலும் என்னை முந்திக் கொண்டார் என்று குறிப்பிடுவார்களாம். இன்னும் அன்னையின் சகோதரர்களில் ஒருவரான அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்களை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்பண்புள்ளவர் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.

அன்னையவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை மிகவும் பேணுதலுடன் பின்பற்றும் பெண்மணியும், இன்னும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும், நோன்பு நோற்பதிலும் அன்னையவர்கள் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்னையவர்கள் மிகச் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர்களாகவும், இறைவேதமான குர்ஆனை அழகிய தொணியில் ஓதக் கூடியவர்களாகவும் இருந்ததோடு, இன்னும் ஏழு சகோதர, சகோதரரிகளில் ஒருவராகவும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட மிகச் சிறப்பு வாய்ந்த குடும்பத்தவர்களில் ஒருவராகவும் அன்னையவர்கள் திகழ்ந்தார்கள். அன்னையவர்களின் தந்தை உமர் பின் கத்தாப் (ரலி), சிறிய தந்தையார் ஜைத் பின் கத்தாப் (ரலி), அன்னையவர்களின் முதல் கணவர் ஹானீஸ் பின் ஹதாஃபா (ரலி), இன்னும் அன்னையவர்களின் தாயாருடைய சகோதரர்களான உத்மான் பின் மாசூன் (ரலி), குதாஃபா பின் மாசூன் (ரலி), அப்துல்லா பின் மாசூன் (ரலி), இன்னும் ஸாயிப் பின் அப்துல்லா பின் மாசூன் (ரலி) ஆகியோர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட சிறப்பு மிக்கவர்களாவார்கள். இவர்கள் அனைவரும் பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்டு, இஸ்லாத்தை உயிர்ப்பிக்கப் போராடியவர்களாதலால், இறைத்தூதர் (ஸல்) அவர்களினால் சுவனத்தை அனந்தரக் கொள்ளக் கூடியவர்கள் என்று நற்செய்தி பகரப்பட்டவர்களுமாவார்கள்.

அன்னையவர்கள் மேலே கண்ட மிகச் சிறந்த பாரம்பரியத்தையும், குலச் சிறப்புக்களையும் பெற்றிருந்த காரணத்தால், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புத் தகுதிகளை அன்னையவர்கள் பெற்றிருந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மிகச் சிறந்த தோழரான உமர் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வியானபடியால், இளமையிலேயே இறையச்சமிக்க நற்குணமுள்ள பெண்மணியாக வார்த்தெடுக்கப்பட்டார்கள். இன்னும் முன்மாதிரி மிக்க அவரது வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இளமைக் காலத்தின் பொழுது, இன்னும் அவர்களுக்கு நபிப்பட்டம் வழங்காதிருந்த பொழுது, கஃபாவை புனர்நிர்மாணம் செய்தவற்காக குறைஷிகள் திட்டமிட்டனர். இந்த திட்டமிடலில் யார் கஃபாவின் கருப்புக்கல்லை எடுத்துவைப்பது என்ற சர்ச்சையில், பல காலங்கள் அவர்களுக்குள் போர்களும் நடந்தன. பல உயிர்கள் குடிக்கப்பட்டன. இந்த சர்ச்சையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எளிதாகத் தீர்த்து வைத்த ஆண்டில் தான் அன்னையவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்கள். எனவே, அன்னையவர்கள் சற்று பருவம் எய்திய காலத்தில் இஸ்லாத்தில் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஒரு சேர தழுவிக் கொண்டிருந்த காரணத்தினால், அன்னையவர்கள் இளமைச் சூழல் முழுக்க முழுக்க இஸ்லாமியச் சூழலில் வார்த்தெடுக்கப்பட்டிருந்தது. இந்த கால கட்டத்தில் உமர் (ரலி) அவர்களும், அன்னையவர்களின் தாயும், இன்னும் சிறிய தந்தையர்கள், மாமன்மார்கள் என அனைவரும் இஸ்லாத்தினை வாழ்வியல் நெறியாக ஏற்றிவிட்டிருந்ததும், இந்த இஸ்லாமியச் சூழல் உருவாகக் காரணமாக இருந்தது. இன்னும் அன்னையவர்கள் பருவமெய்திய பின், ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரலி) என்ற நபித்தோழருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள். இவர் அபுபக்கர் (ரலி) அவர்களின் அழைப்பின் தாக்கத்தின் காரணமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராவார்.

அன்னையவர்களின் கணவர் ஹானீஸ் பின் ஹஸஃபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதை அறிந்த மக்கத்துக் குறைஷிகள் மற்ற நபித்தோழர்களுக்கு எந்தளவு தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்தார்களோ, அது போலவே பல கொடுமைகளை இவர் மீதும் கட்டவிழ்த்து விட்டார்கள். எனவே, அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற குழுவினரில் இவரும் ஒருவராக இணைந்து கொண்டார். அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற ஹானீஸ் பின் ஹஸஃபா (ரலி) அவர்களுக்கு வீட்டு ஞாபகம் அதிகம் வந்ததன் காரணமாக, மீண்டும் தான் பிறந்து வளர்ந்து வாலிபமாகிய மக்காவிற்கே திரும்பி வந்து விட்டார்கள். மிக நீண்ட காலம் மக்காவை விட்டு அபீசீனியாவில் தங்கியிருந்து, அதன் பின் மக்காவிற்குத் திரும்பி வந்த போதிலும், முஹம்மது (ஸல்) அவர்களது தூதுத்துவத்திற்கு எதிரான குறைஷிகளின் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இந்த கால கட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அறிவுறுத்தவே, அவ்வாறு ஹிஜ்ரத் செய்து செல்பவர்களின் குழுவில் ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரலி) அவர்களும் ஒருவராகக் கலந்து கொண்டு, மதீனாவை நோக்கி தனது மனைவியுடனேயே ஹிஜ்ரத் செய்தார். இவரை அப்துல் மன்ஸர் (ரலி) அவர்கள் வரவேற்று தனது இல்லத்தில் தங்க வைத்துக் கொண்டார்கள். இன்னும் இதற்குப் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், மக்காவில் நிறைவேற்ற வேண்டிய சில பொறுப்புக்களுக்கு அலி (ரலி) அவர்களை நியமித்து, தானும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து விட்டார்கள்.

மதீனாவை அடைந்ததும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முதல்பணியாக மக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்களையும், சொந்த பூமியின் மைந்தர்களும் உதவியாளர்களுமாகிய அன்ஸார்களையும் ஒரு குடும்பத்து மக்களாக இணைத்து வைத்து, சகோதர பாசத்தை விதைத்தார்கள். அவ்வாறு சகோதரர்களாக்கப்பட்டவர்கள் தான் நமது ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரலி) அவர்களும், அபூ அப்பாஸ் பின் ஜாபர் அன்சாய் (ரலி) அவர்களும். இருவரும் மிகச் சிறந்த குதிரை ஏற்ற வீரர்கள். இன்னும் உலகில் மிகச் சிறந்த பள்ளிக் கூடமாகிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறிப் பள்ளியில் பாடம் பயின்ற மாணவர்களுமாவார்கள். இன்னும் இருவரும் மிகச் சிறந்த படைவீரர்களுமாவார்கள்.

மதீனாவின் சூழல் புதிதாக இருந்தாலும், அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன்னும் அச்சுறுத்தல்கள் ஆகிய அனைத்தும் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விட்ட வாழ்க்கையை, புதியதொரு வாழ்வை ஹானீஸ் (ரலி) அவர்களும், இன்னும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் அனுபவித்தார்கள்.

இந்தப் புதிய சூழல் தந்த மாற்றங்களில், ஹப்ஸா (ரலி) அவர்கள் அவ்வப் பொழுது இறங்கக் கூடிய இறைவசனங்களை மனனமிடக் கூடியவர்களாகவும், இன்னும் அதன் அர்த்தம் அதன் விரிவுரை ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஹப்ஸா (ரலி) அவர்கள் குர்ஆனின் மீது அலாதியான ஈடுபாடு கொண்டிருந்த பொழுது, அவரது கணவரான ஹானீஸ் (ரலி) அவர்களோ, இறைவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். எதிரிகள் குறித்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்ட ஹானீஸ் (ரலி) அவர்கள், எதிரிகளிடமிருந்து வரக் கூடிய எத்தகைய தாக்குதல்களையும் எதிர்கொண்டு சமாளிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

இப்பொழுது, மக்கத்துக் குறைஷிகள் முஸ்லிம்களை பூண்டோடு இந்தப் பூமியை விட்டும் அப்புறப்படுத்தி விடுவதற்காக, மதீனாவை நோக்கிப் படை திரட்டி வந்து கொண்டிருக்கின்ற செய்தியை மதீனாவின் முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். மிகச் சிறிய படையைக் கொண்ட முஸ்லிம்களை தாக்கி அழித்து விடுவதற்காக அபூஜஹ்ல் பெரும் படை ஒன்றைத்திரட்டி வந்து பத்ர் என்ற இடத்தில் மூன்று நாட்கள் தங்கி, அந்த மூன்று நாட்களிலும் ஆட்டும் பாட்டும் கொண்டாட்டுமாகக் கழித்து கொண்டிருந்தான். இன்னும் நாம் திரட்டி வந்திருக்கின்ற இந்த படையின் எண்ணிக்கையை அரபுக் குலத்தவர்களில் எவர் அறிந்து கொண்டாலும், நமக்கெதிராக போர் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களில் நெஞ்சிலே துணிவு பிறக்காது என்றும் அவன் இருமாப்புக் கொண்டான். இன்னும் விரல் விட்டு எண்ணி விடக் கூடிய முஸ்லிம்கள், தன்னை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களது வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்றும் அவன் துடித்துக் கொண்டிருந்தான்.

அபூஜஹ்ல் திரட்டி வந்திருந்த படையோடு ஒப்பிடும் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் வந்திருந்த முஸ்லிம் படை எல்லாவற்றிலும் பலம் குன்றியதாகவே காணப்பட்டது. இன்னும் முஸ்லிம்கள் போர்முகத்திற்கு வந்ததும், அவர்கள் செய்த ஒரே வேலை தண்ணீர் பிடிப்புப்பகுதியைத் தங்களது கைவசம் வைத்துக் கொண்டது தான். இதுதவிர ஆள்பலமோ, ஆயுத பலமோ முஸ்லிம்களிடத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தான் இருந்தது. இங்கே, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் வந்திருந்த முஸ்லிம்களும் அல்லாஹ் ஒருவனை நம்பி மட்டுமே களத்திற்கு வந்திருந்தனர். அவனது அருள் மழையை வேண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் செய்தார்கள்.

இந்தப் போரில் ஹப்ஸா (ரலி) அவர்களின் கணவர், தந்தையாரான உமர் (ரலி) அவர்கள் மற்றும் தாய் வழி மற்றும் தந்தை வழிச் சொந்தங்களும் முஸ்லிம்களின் அணியில் பத்ருக் களம் நோக்கி வந்திருந்தார்கள். எதிரிகளைக் களம் கண்ட முஸ்லிம்கள், பத்ருப் போரில் தங்களது வீரத்தைக் காட்டினார்கள். அந்த வகையில் நமது ஹானீஸ் (ரலி) அவர்கள் எதிரிகளின் படைகளை ஊடறுத்துச் சென்று தனது வீரத்தைக் காட்டினார். இதன் காரணமாக அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. எதிரிகளின் பல தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். போரின் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குக் கிடைத்தது. உலக வரலாற்றில் ஆள் பலமற்ற, ஆயுத பலமற்றதொரு கூட்டம், முழு அளவு தயாரிப்புடன் வந்திருந்த படையை வெற்றி கொண்டதென்பது இந்தப் போரில் தான் என்பது வரலாற்றில் மாற்ற முடியாததொரு நிகழ்ச்சியாகும்.

போர் முடிந்ததன் பின், போரில் காயம் பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், போரின் சில பின் நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பத்ர்க்களத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள்.

தனது கணவரின் வீர தீரச் செயல்களைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உளம் மகிழ்ந்தார்கள். இன்னும் காயம்பட்ட இந்த நேரத்தில் தனது கணவருக்குப் பணிவிடை செய்து ஒத்தாசையாக இருப்பது அவசியம் எனப்பட்ட பொழுது, பத்ர் யுத்தத்தைப் பற்றி இறங்கிய இந்தக் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் கொண்டார்கள்,

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (8:10)

அல்லாஹ் வாக்களித்த வெற்றியைக் கண்டு அகமகிந்த ஹஃப்ஸா (ரலி) அவர்கள், தனது கணவருக்குப் பணிவிடை செய்வதில் அகமகிழ்ந்தார்கள். ஆனாலும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காயங்கள் ஏற்படுத்திய ரணங்களின் வடுக்கள், அவருக்கு இந்த உலக வாழ்வைக் குறுக்கி வைத்து, மறுமை வாழ்வை நெருக்கி வைத்தது. மிக விரைவிலேயே அவர் மரணித்து, சொர்க்கத்தை நன்மாரயமாகப் பெற்றுக் கொண்டவர்களின் கூட்டத்தில் இணைந்து கொண்டார். ஹஃப்ஸா (ரலி) அவர்களின் கணவர் இறந்த செய்தியைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக கவலை அடைந்தவர்களாக, அவர்களை ஜன்னத்துல் பக்கீயில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ததுடன், தானே முன்னின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தனது கணவரை இழந்த ஹஃப்ஸா (ரலி) அவர்கள், கவலை தோய்ந்திருந்தாலும் இறைவனின் வல்லமையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அமைதி காத்தார்கள். முன்னைக் காட்டிலும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தனது நேரத்தை வணக்கத்திலும் இன்னும் இறைவனைப் புகழ்வதிலும் கழித்தார்கள். இந்த நிலையில் ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு 21 வயதே தான் ஆகியிருந்தது.

தனது மகளின் இந்த நிலையைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் வலியின் வேதனையால் துடித்தார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தனக்கேற்பட்ட இந்த சூழ்நிலையின் இறுக்கத்தைத் தணிப்பதற்காக குர்ஆனை ஓதிவதிலும், தொழுவதிலும் கழித்து, தன்னைப் படைத்தவனின் பெருமைகளை நினைவு கூர்வதில் அமைதியைக் கண்ட போதிலும், அந்த அமைதியே அந்த வீட்டில் உள்ளோருக்கு வேதனையைத் தந்து கொண்டிருந்தது. இதுவே ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வாழ்க்கையின் அங்கமாகவும் ஆகி விட்டிருந்தது.

இந்த சமயத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மருமகனாரான உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் தனது மனைவியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளுமான ருக்கையா (ரலி) அவர்களை இழந்திருந்தார்கள். எனவே, ருக்கையா (ரலி) அவர்களின் இடத்தை தனது மகளால் நிரப்ப இயலும், அதற்கு தனது மகள் முற்றிலும் தகுதி வாய்ந்தவர் தானே என எண்ணிய உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அணுகி, தனது மகளை மணந்து கொள்ளும்படி கோரினார்கள். சோகத்தின் இறுக்கத்தில் இருந்த உதுமான் (ரலி) அவர்களோ, உமர் (ரலி) அவர்களை ஒருமுறை பார்த்து விட்டு, சற்று அமைதி காத்து விட்டு பின்பு கூறினார்கள், உமர் (ரலி) அவர்களே..! இது பற்றி சிந்திப்பதற்கு எனக்கு சற்று அவகாசம் தேவைப்படுகின்றது.

மீண்டும் சில நாட்கள் கழித்து, தனது கோரிக்கையைப் பற்றி சிந்தித்தீர்களா உதுமான் (ரலி) அவர்களே..! என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட பொழுது, நான் இப்பொழுது மணமுடிக்கும் நிலையில் இல்லை என்று கூறி விட்டார்கள்.

பின் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் சென்ற உமர் (ரலி) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களே..! எனது மகளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டவர்களாக எந்தப் பதிலையும் கூற மறுத்து விட்டார்கள். இந்த முழு சம்பவத்தையும் இமாம் புகாரீ அவர்கள் தனது ஹதீஸ் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

இரண்டு பேரிடமும் கிடைத்த பதில்கள் யாவும், தனது மகளை மணம் செய்து கொள்வதற்கு அவர்கள் மறுக்கவும் இல்லை, முடியாது என்றும் சொல்லவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்த போன உமர் (ரலி) அவர்கள் நேரே தனது ஆருயிர்த் தோழர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்த விபரங்களைக் கூறுகின்றார்கள்.

உமரே..! நீங்கள் வருத்தப்படவும் வேண்டாம், கவலைப் படவும் வேண்டாம். உதுமான் (ரலி) அவர்களை விடச் சிறந்த துணையை உங்களது மகளுக்கு அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். அதுபோல உங்களது மகளை விடச் சிறந்த துணையை அல்லாஹ் உதுமான் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களிலிருந்து நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்களுக்கு இப்பொழுது புதுக் கவலை ஒன்று தொற்றிக் கொண்டது, உதுமான் (ரலி) அவர்களை விட மிகச் சிறந்த நபர் யாராக இருக்கும்? என்ற கவலை தான்.

சில நாட்கள் கழித்து, தனது மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த சம்பவங்களில் ஒன்று இப்பொழுது நடந்து விட்டது, இன்னுமொரு பகுதி தனது மகளைப் பொறுத்து நிறைவேறாமல் இருக்கின்றதே, என்ற வினா இப்பொழுது தொற்றிக் கொண்டு, யார் அந்தப் பெருமகன்? என்ற சிந்தனை உமர் (ரலி) அவர்களைத் தொற்றிக் கொண்டது. உதுமான் (ரலி) அவர்களை விடச் சிறந்த அந்த மனிதர் யாராக இருக்கும்?

ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் தான் மணக்க விரும்புவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்த பொழுது, உமர் (ரலி) அவர்களால் தனது காதையே நம்ப முடியவில்லை, இன்னும் தனது மகள் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில் சேர்வதற்காக தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மிகவும் சந்தோசப்பட்டார்கள். ஏற்கனவே ஆயிஷா (ரலி) மற்றும் சௌதா (ரலி) ஆகிய அன்னையர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள்.

உஹதுப் போருக்கு முன்பாக, ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இப்பொழுது அன்னையவர்களுக்கு 22 வயது நிரம்பியிருந்தது. தனது மகளை இறைத்தூதர் (ஸல்) அவர்களது இல்லத்தில் பார்க்கும் பொழுதெல்லாம், ஹஃப்ஸாவே..! நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடன் போட்டி போடாதீர்கள், அவர்கள் உங்களைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தவர்கள் என்று தனது மகளுக்கு அறிவுரை கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்களுடன் அன்பாகவும், மரியாதையாகவும், பண்பாடாகவும் நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.
, ,