குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

20.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

துல் ஹஜ் 10 நாட்களின் சிறப்பு
சர்வப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் - தோழர்கள் மீதும் அனைவர் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு - அவர்கள் அதிக அளவில் நல்லமல்களை மேற்கொள்ளும் வகையில் சில பருவ காலங்களை அமைத்துக்கொடுத்திருப்பது அவனுடைய கருணையே ஆகும் ! அத்தகைய பருவ காலங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்த நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன!

அல்லாஹ் கூறுகிறான் :
வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக!

இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும்- இப்னு அப்பாஸ், இப்னு ஸுபைர் மற்றும் முஜாஹித் (ரலி) ஆகி யோரும் இதையே கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

துல் ஹஜ் மாதத்தின் பத்துநாட்களும் அவற்றில் செய்யும் அமல்களும்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் மகத்துவம் உடையதாகவும் பிரியமானதாகவும் உள்ளது! இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்தநாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹு அக்பர் - அல் ஹம்து லில்லாஹ் என்று அதிகம் அதிகம் சொல்லுங்கள்! அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்னத் அஹ்மத்

 ஃபத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் சாத்தியப்பட மாட்டாது! எனவே நாம்இந்நாட்களில் பின் வரும் அமல் களில் கவனம் செலுத்து வது விரும்பத்தக்கதாகும் :

தொழுகை! - கடமையான தொழுகைகளை விரைந்து நிறைவேற்றவேண்டும். நஃபிலான தொழுகைகளை அதிகம் அதிகம் தொழவேண்டும்!

நோன்பு! - இந்நாட்களில் நஃபிலான நோன்புகளை நோற்கவேண்டும்., நோன்பும் நல்லமல்களில் உள்ளதாகும் என்பதால்!

தக்பீர் சொல்லல்! - இதற்கு மேலே சொன்ன நபிமொழி ஆதாரமாய் உள்ளது. அதை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்நாட்களில் - தொழுகைக்குப் பின்பும் தக்பீர் அதிகம் சொல்பவர்களாய் இருந்துள்ளார்கள். வீதிகளிலும் கூடாரத்தில் வைத்தும் மக்களின் அவைகளிலும் அதிகம் தக்பீர் சொல்பவர்களாய் இருந்துள்ளனர்.

அரஃபா நாளின் நோன்பு! - ஹாஜிகள் அல்லாதாருக்கு இந்நோன்பு ஸுன்னத்!; இந்த நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:. இந்நோன்பு- சென்ற ஆண்டுக்கும் நடப்பாண்டுக்கும்; குற்றப் பரிகாரமாகஅமையும் என நான் ஆதரவு வைக்கிறேன்,. ஆனாலும் அரஃபாவில் தங்கியுள்ள ஹாஜிகள் இந்நோன்பை நோற்க மாட்டார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்காமல்தான் அரஃபாவில் தங்கியிருந்தார்கள்!

இந்நாட்களை நாம் வரவேற்பது எப்படி? நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான் இதுபோன்ற காலகட்டங்களில் பாவமீட்சி தேடி இறைவன்பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்! அது தூய்மையான பாவமீட்சியாகவும் வாய்மையானதாகவும் இருக்கவேண்டும்! பாவங்ளை விட்டு விலகுவதுடன் இனி எப்போதும் அவற்றைச் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும்! நிச்சயமாக பாவங்கள்தாம் இறையருளைப் பெறவிடாமல் மனிதனைத் தடுத்து அவனை இறைவனை விட்டும் தூரமாக்குகின்றன! நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது உவப்பைப் பெறமுயல்வோமாக!



, ,